
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் 300 வீதத்தால் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக டொலரின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது. ரூபாயின் பெறுமதியுடன் ஒப்பிடுகையில் டொலரின் பெறுமதி பாரிய அளவில் அதிகரித்துள்ளது.
இறுதியாக 2020ஆம் ஆண்டு இலங்கைக்கு புதிய வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தன. அத்தருணத்தில் டொலரின் பெறுமதி குறைவாக இருந்தது. தற்போதைய பெறுமதியின் பிரகாரம் இவ்வாறு 300 வீத அதிகரிப்பு இடம்பெற வாய்ப்பிருப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் கூறியுள்ளனர்.
ஜப்பானில் டொயோட்டா நிறுவனம் தயாரிக்கும் பஸ் ஒன்றை கடந்த 2020ஆம் ஆண்டு 70 இலட்சத்துக்கு விற்பனை செய்ய முடிந்திருந்த போதிலும் தற்போது அதனை 2 கோடிக்கே விற்பனை செய்ய முடியும் எனவும் வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து, சுற்றுலா போன்ற துறைகளில் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு மாத்திரமே அமைச்சரவை அங்கீகாரத்தை தற்போது வழங்கியுள்ளது. தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாத நடுப்பகுதியில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனுமதி கிடைத்தவுடன் தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான நடவடிக்கைகள் தொடங்கப்படும் என்றும் இறக்குமதியாளர்கள் கூறியுள்ளனர்.