
மீகொடை துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 14ஆம் திகதி மீகொடை, நாகஹவத்தை பிரதேசத்தில் காரில் பயணித்த நபரொருவரை சுட்டுக் கொன்ற குற்றத்துடன் தொடர்புடைய 3 சந்தேக நபர்களே ஹோமாகம மற்றும் மீகொடை பொலிஸ் பிரிவுகளில் வைத்து நேற்று (22) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் 22, 26 மற்றும் 38 வயதுடைய பாதுக்கை மற்றும் மீகொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 19ஆம் திகதி, இக்குற்றத்துடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேகநபரையும் அதற்கு உறுதுணையாக இருந்த மற்றுமொரு சந்தேக நபரையும் மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே ஏனைய 3 சந்தேகநபர்களும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபருடன் இந்தக் குற்றத்தைச் செய்ய வந்தவர் என்பதுடன், மற்றைய இருவரும் இந்த குற்றத்திற்கு உதவியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் மீகொடை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.