
தேர்தலுக்கு முன்னர் அதிஉயர் z புள்ளிகளை பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இல்லையெனில், நாடாளவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என வடக்கு – கிழக்கு உள்வாரி பட்டதாரிகள் சங்கத் தலைவர் ஸ்ரீஸ்கந்தராஜா சர்வகியன் தெரிவித்தார்.
நேற்று (22) யாழ். ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
”வடக்கில் உள்வாரி பட்டதாரிகள் 2,500 மேற்பட்டவர்கள் காணப்படுகின்றனர். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு அரசினால் நியமனம் வழங்கப்பட்டது. அரசினால் நியமனம் வழங்கப்பட்ட பொழுதிலும், 2014 ஆம் ஆண்டு உயர்தர மாணவர்ளுக்கு அதாவது 2020 / 2021 பட்டமளிப்பு பெற்ற பட்டதாரிகளுக்கு பட்டம் வழங்கப்படவில்லை. யாழ். பல்கலைக்கழக மாணவர்களை வேலை வாய்ப்பில் உள்ளீர்க்க வேண்டிய தேவை குறித்து தெளிவுபடுத்தி கடிதம் ஒன்றினை வழங்கியிருந்தோம். கொரோனா, குண்டு வெடிப்பு, பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர் சங்க போராட்டம் என்பன எமக்கு பட்டத்தினை பெறுவதில் தாமதம் ஏற்பட காரணமாக அமைந்தன. எனினும் எமது அணியினை சேர்ந்த வேறு பல்கலைக்கழக மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்நிலையில் நாம், கடந்த அரசாங்கத்துடன் பல்கலைக்கழகம் எமக்கு தந்த நியாயபூர்வமான கோரிக்கையை முன்வைத்து கலந்துரையாடலை மேற்கொண்டிருந்த பொழுதிலும் அரசாங்கம் மாறிவிட்டது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு கடந்த ஒக்ரோபர் மாதம் முதலாம் திகதி விரைவு தபாலை அனுப்பியிருந்தோம். நவம்பர் மாதம் 4 ஆம் திகதி பிரதமர் ஹரிணிக்கு விரைவு தபால் அனுப்பிய பொழுதும் எமக்கு எந்த பதிலும் வழங்கபடவில்லை. அரசுக்கு சார்பானவர்கள் ஜனாதிபதி தேர்தல் முடிய பேசலாம், பாராளுமன்ற தேர்தல் முடிய பேசலாம் என தெரிவித்தனர்.
இரு தேர்தல் முடிந்தும் எந்த பலனும் இல்லை. தேசிய கல்வியியற் கல்லூரிக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்கள் எம்மை விட குறைந்தளவான z புள்ளிகளுடன் உள்ளீர்கப்பட்டு பின்னர் நியமனத்துடன் வெளியேறுகின்றார்கள். பின்னர் நாம் படித்து முடிக்க முதல் அடுத்த பட்டத்தினையும் தொடர்கின்றார்கள். கூடுலான புள்ளிகளை பெற்ற நாம் பெயின்டிங், கூலி, சந்தை வியாபாரிகளாக உள்ளோம்.
தற்பொழுது போட்டி பரீட்சை குறித்து பேசுகின்றனர். நல்ல விடயம் எமக்கு ஆட்சேபனை இல்லை. எனினும் அதற்கு முன்னர் உள்ளவர்களுக்கு பரீட்சை நடாத்தப்பட்டதா? மேலும் தொல்லியல், சமூகவியல், தத்துவவியல் ஆகிய பாடங்களுக்கு வர்த்தமானியில் போட்டி பரீட்சைக்கு கோரப்படுவதில்லை. அவர்கள் பட்டதாரிகள் இல்லையா? ஆகவே இங்கு போட்டி பரீட்சைகளும் பாரபட்சமின்றி நடாத்தப்படவேண்டும்.
வடக்கிலே சிங்கள மொழி இரண்டாம் மொழி கற்கைநெறிக்கான ஆசிரியர் வெற்றிடம் உள்ளது. திணைக்களங்களில் மாகாண சபையின் கீழே மொழிபெயர்பாளர்களுக்கு வெற்றிடம் உள்ளது. வெளியே தகுதி வாய்ந்த பலர் உள்ளனர். தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் மொழிபெயர்பாளர் வெற்றிடம் உள்ளது.
அரசாங்கம் 35,000 பட்டதாரிகளை உள்ளீர்ப்பதாக கூறிய பொழுதிலும் இதுவரையிலும் எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.
ஆகவே, ஏப்ரல் மாதம் உள்ளூராட்சி தேர்தல் முன்னெடுக்கப்படவுள்ளது. தேர்தல் காலத்தில் நியமனங்களை வழங்க முடியாது. தேர்தலுக்கு முன்னர் 2020/2021 வெளியேறிய உள்வாரி பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளித்து வேலை வாய்ப்பு வழங்கப்படவேண்டும். தொடர்ந்து 2022/2023 பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
தொடர்ந்து எம்முடன் எந்தவித பேச்சுவார்த்தையையும் அரசு மேற்கொள்ளாதுவிடின் வடக்கு – கிழக்கு இலங்கை தழுவிய பட்டதாரிகள் இணைந்து பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என கூறியதோடு உங்கள் ஆட்சி மீது எமக்கு நம்பிக்கை உள்ளது” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.