பெண்ணொருவரை, காங்கேசன்துறை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பாலியல் உறவுக்கு அழைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று (24) காலை காங்கேசன்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர், மாவிட்டபுரம் தையலகத்தில் தைப்பதற்காக கொடுத்த சீருடையை எடுப்பதற்கு மது போதையில் சென்றுள்ளார்.
இந்த வேளையில் தையலகத்தில் பணிபுரியும் பெண்களை தன்னுடன் பாலியல் உறவுக்கு வருமாறு வற்புறுத்தியதுடன், தொடர்ந்து குறித்த கடைக்கு வந்த இரு யுவதிகளிடமும் தன்னுடன் பாலியல் உறவுக்கு வருமாறு கொச்சைத் தமிழில் கேட்டுள்ளார்.
இதனால் கோபமடைந்த குறித்த பெண் தனது கணவருக்கு தொலைபேசியில் தெரிவித்த நிலையில், குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நையப்புடைக்கப்பட்டு பொதுமக்களால் முச்சக்கர வண்டி மூலம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறித்த பெண்ணை விசாரிக்க முற்பட்ட போது தன்னிடம் கார் உள்ளதாகவும், நீங்கள் அழகாக உள்ளீர்கள் என்னுடன் பாலியல் இச்சைக்கு வருகிறாயா? எனவும் கேட்டு மதுபோதையில் கலகம் செய்ததாக அப்பெண் கூறினார்.
இந்தவேளையில் பெண்ணின் உறவினர் தன்னிடம் காணொளியும் உள்ளதாக தெரிவித்தார். இதன்போது குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் குறித்த பெண்ணின் கணவன் மீது பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்குதல் நடாத்தினார்.
உடனடியாக பொலிஸார் குறித்த உத்தியோகத்தரை தடுத்து நிறுத்திய நிலையில் பொறுப்பதிகாரி தனது அறையினுள் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து சமரசம் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
அதனை அடுத்து குறித்த விடயம் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டது.
இதன் பின்னர்,பாராபட்சமற்ற விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என யாழ். பிராந்திய மனித உரிமை ஆணைக்குழுவின் த.கனகராஜ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தற்போது இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
