
அரசாங்கம் வருடத்திற்கு 210 நாட்களுக்கு பாடசாலைகளை நடாத்தி வந்த நிலையில், 2025 ஆம் ஆண்டிலிருந்து பாடசாலை நாட்களை 181 நாட்களாக குறைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதிகளவிலான அரச விடுமுறைகளுடன் முதல் தவணை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள், அரசாங்க பாடசாலைகள் மற்றும் பிரிவெனா மாணவர்கள் வருடாந்த கற்றலுக்காக வருகை தரும் நாட்கள் இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையை நிறைவு செய்யும் வகையில் ஜனவரி மாதம் 02 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை முதல் மூன்று வாரங்களுக்கு பாடசாலைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப ரீதியாக அடுத்த ஆண்டுக்கான கல்வியாண்டு ஜனவரி 27ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அடுத்த வருடத்திற்கான 26 பொது விடுமுறை நாட்களில் 04 விடுமுறை நாட்கள் மாத்திரமே வார இறுதி நாட்களில் வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏனைய அனைத்தும் வாரநாட்களாக இருப்பதால் 210 நாட்களுக்கு பாடசாலைகளை நடாத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாடசாலைகளை நடாத்தும் நாட்கள் 181 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.