மத்திய கிழக்கு போர் நிலமை- பொருளாதார கண்காணிப்புக் குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பொருளாதார பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக, பொருளாதார கண்காணிப்புக் குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சரும், தொழிலாளர் அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தலைமையில், சம்பந்தப்பட்ட நிறுவனத் தலைவர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய இக்குழுவை நியமிப்பதற்கென ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் நிலைமை காரணமாக உலகளாவிய ரீதியில் நிலையற்ற பொருளாதாரச் சூழல் உருவாகியுள்ளதுடன், அதன் மூலம் இலங்கைப் பொருளாதாரத்திற்கும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மிகச் சிறிய திறந்த பொருளாதாரத்தைக் கொண்ட இலங்கை, எரிபொருள் இறக்குமதி, மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் மற்றும் அப் பிராந்தியத்துடனான வர்த்தக மற்றும் முதலீட்டுத் தொடர்புகளில் தங்கியிருப்பதால், இவ்வாறான வெளிப்புற பொருளாதார அதிர்ச்சிகளுக்கு உள்ளாகும் அபாயம் காணப்படுகின்றது.

இந்த நிலைமையைக் கருத்திற் கொண்டு, இலங்கைப் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கங்களைத் தொடர்ச்சியாகக் கண்காணித்தல், பல்வேறு துறைகளில் ஏற்படக்கூடிய அபாயங்களை மதிப்பிடுதல் மற்றும் நிலவும் சூழலை அவ்வப்போது ஆய்வு செய்து மேற்கொள்ள வேண்டிய அவசியமான கொள்கை ரீதியான நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவைக்குப் பரிந்துரைகளை முன்வைத்தல் ஆகிய பணிகள் இக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply