அண்மையில் நிறைவடைந்த ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளில் முன்கூட்டியே வௌியான மூன்று வினாக்களுக்கு இலவச மதிப்பெண்கள் வழங்குவது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நீதிபதிகளான யசந்த கோதாகொட, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த முடிவை அறிவித்துள்ளது.
அத்துடன், நிபுணர்கள் முன்வைத்துள்ள மூன்று பரிந்துரைகளில் இருந்து பொருத்தமான பரிந்துரையை தெரிவு செய்து அதனை உடனடியாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் தாக்கல் செய்த நான்கு அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலித்ததன் பின்னரே உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
மேலும், இந்த வினாத்தாள்கள் வெளியானதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்களான ஐ.ஜி.எஸ். பிரேமதிலக்க மூன்று மில்லியன் ரூபாவையும், சமிந்த குமார இளங்கசிங்க இரண்டு மில்லியன் ரூபாவையும் அரசாங்கத்திற்கு இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
ஐந்தாண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் தாளில் மூன்று வினாக்கள் முன்கூட்டியே வெளியிடப்பட்டதால், அனைத்து மாணவர்களுக்கும் இலவச மதிப்பெண்கள் வழங்குவதற்கான அரசாங்கத்தின் முடிவால் தமக்கு அநீதி இழைக்கப்படுவதாக மனுதாரர்கள் சம்பந்தப்பட்ட மனுக்களில் குறிப்பிட்டிருந்தனர்.
தங்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பு வழங்குமாறு கோரி இந்த மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
அத்துடன், மூன்று வினாக்களுக்கும் முழு மதிப்பெண் வழங்க எடுக்கப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்து, ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடாத்த உத்தரவிடுமாறும் மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம் மேலும் கோரியுள்ளனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடாத்த வேண்டிய அவசியமில்லை என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர கடந்த ஒக்டோபர் 14ஆம் திகதி தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
