‘புதிய இளையவர்கள், மகளிர்கள் அரசியல் பயணத்துக்கு முன்வர வேண்டும்’- சி.வி.கே.சிவஞானம்!

‘புதிய இளையவர்கள், மகளிர்கள் அரசியல் பயணத்துக்கு முன்வர வேண்டும்’ என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழ். கல்வியங்காட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர், மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த மாவை சேனாதிராஜா பதவி விலகியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்குக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவராக இருந்த என்னைப் பதில் தலைவராக எஞ்சிய காலத்துக்குக் கடமையாற்றுமாறு தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவினர் கூடி தெரிவு செய்திருக்கிறார்கள்.

கட்சியின் அடுத்த மாநாடு வரையில் இந்தப் பணி தொடரும். அதற்கு இடைப்பட்ட காலத்தில் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை ஆகிய இரண்டு தேர்தல்கள் இடம்பெற இருப்பதால் கட்சியில் தொய்வில்லாத வகையில் செயற்பாடுகள் அமைய வேண்டி இருக்கின்றன.

அதற்காகக் கட்சியின் செயற்பாடுகளை முழுவீச்சில் செயற்படுத்த வேண்டிய கடப்பாடுகள் எனக்கு இருக்கின்றன. கடந்த வருடங்களில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் வேட்புமனுக்கள் கோரப்பட்டு தேர்தல் நடைபெறாத நிலையில் அந்த வேட்புமனுக்கள் இரத்தாகும் என்றால் புதிய வேட்பாளர்களைத் தெரிவு செய்ய வேண்டிய நிலை இருக்கின்றது.

எங்களுடைய கட்சியைப் பொறுத்தவரையில் ஒரு கருத்து தவறாகவோ, சரியாகவோ இருக்கின்றது. அதாவது ஏற்கனவே கட்சியில் இருப்பவர்களுக்குத்தான் கட்சி வாய்ப்பளிக்கும் என்பதால் புதியவர்கள், இளையவர்கள் கட்சியில் இணைந்து அங்கத்துவமாகச் சேர்ந்து உள்ளூராட்சி சபைகளிலே அரசியல் ரீதியாகப் பணியாற்றுவதற்குப் பின்னிற்கின்றார்கள் என்ற நிலை இருக்கின்றது.

ஆகவே, உண்மையாகச் சொன்னால் தேர்தல் முறையிலே இருக்கக் கூடியவாறு இளையவர்கள், மகளிர்கள் எனப் போதியவர்கள் எங்கள் கட்சியில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆனாலும், சில இடங்களில் அப்படியானவர்கள் இருந்தாலும் அனைத்து இடங்களிலும் பொருத்தமானவர்கள் இல்லாத நிலைமை உள்ளது.

ஆகவே, புதிய இளையவர்கள், மகளிர்கள் அரசியல் பயணத்துக்கு முன்வர வேண்டுமென நான் அழைப்பு விடுக்கிறேன். மக்களுக்குச் சேவையாற்ற எமது கட்சியுடன் இணைந்து பயணிக்க முன்வர வேண்டும் எனக் கோருகின்றேன்.

அவர்கள் வசிக்கின்ற பகுதிகளிலுள்ள கட்சியின் மூலக்கிளை அல்லது தொகுதிக் கிளையின் ஊடாக விண்ணப்பித்து அடுத்து வரும் இரண்டு வாரங்களுக்குள்ளே சேர்ந்து கொண்டால் கட்சி ஒரு தீர்க்கமான முடிவை எடுத்து பயணிக்கும்.

வடக்கு, கிழக்கிலே கட்டமைப்பைக் கொண்டதும், அனைத்து மாவட்டங்களிலும் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் கொண்டதும் எங்களுடைய கட்சிதான். ஆனாலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தொய்வு அல்லது நாங்கள் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த பின்னடைவில் இருந்து அடுத்து வரும் தேர்தல்களில் மீளெழுச்சி பெற்று நாங்கள் எங்களை நிலைநாட்டிக்கொள்ள வேண்டும்.

அவ்வாறு கட்சி மீளெழ வேண்டுமானால் அனைவரும் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டிய தேவை இருக்கின்றது.” – என்றார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply