வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 2 இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

இரண்டு இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று (03) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது, ஓமானிலிருந்து இன்றைய தினம் காலை 05.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இரண்டு இளைஞர்கள், 59 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக எடுத்துவந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகளிலிருந்து 39,600 வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 198 சிகரட்டு காட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

களுத்துறை, கொனபொல மற்றும் பண்டாரகம ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 24 மற்றும் 23 வயதுடைய இரண்டு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து,கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 08 ஆம் திகதி நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜராகுமாறு விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply