
ஐந்தாம் தர புலமைப்பரிசிலை இரத்து செய்யுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இது தொடர்பான முடிவெடுக்கும் பொறிமுறையை வலுப்படுத்த முயற்சிக்கிறோம்’ என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
மாகாணக் கல்வி நிறுவனங்களின் தலைவர்களுடன் நேற்று (02) அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஐந்தாம் தர புலமைப்பரிசிலை இரத்து செய்யுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அது பிள்ளைகளுக்கு மன உளைச்சல் என்கிறார்கள். ஆனால் அதற்கு முன்னர் ஐந்தாம் தர பரீட்சையினை ஏன் நடத்தக் காரணம் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். அதற்கு பாடசாலைகளுக்கு மத்தியில் உள்ள வேறுபாடுதான் எனத் தெரிவித்திருந்தார்.
ஐந்தாம் தர புலமைப்பரிசில் இரத்து செய்யப்பட வேண்டுமானால், பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை மூட வேண்டும்.
பிரச்சினைக்கு தீர்வை வழங்காமல் சட்ட ரீதியாகவோ அல்லது கொள்கை ரீதியாகவோ மட்டும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டால் நாட்டில் நெருக்கடிகள் ஏற்படலாம்.
இவ்வாறான நிலைமைகளைக் குறைக்கும் வகையில் பொதுப் பரீட்சை முறையின் கீழ் பரீட்சையை எதிர்கொள்ளும் பிள்ளைகளுக்கு பொதுவான கல்வி முறை இருக்க வேண்டும்.
முடிவெடுக்கும் பொறிமுறையை வலுப்படுத்த முயற்சிக்கிறோம், இது அரசியல்வாதியோ, அமைச்சரோ அல்லது செயலாளரோ தனிப்பட்ட முடிவுகளை எடுப்பதற்காக அல்ல, தரவுகளின் அடிப்படையில் முடிவெடுக்கும் பொறிமுறையை அமைக்க முயற்சிக்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.