
இலங்கையின் பல்வேறு நகரங்களிலும் ஜனவரி 06 முதல் ஜனவரி 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தியத் திரைப்பட விழாவில் தெரிவுசெய்யப்பட்ட இந்திய திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.
கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், கண்டி, ஹம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள அதன் தூதுவராலயங்கள் கொழும்பு சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்துடன் இணைந்து ஒழுங்கமைத்த இத்திரைப்பட விழாவில் காதல், அதிரடி மற்றும் வரலாற்றுக் காவியங்கள் உள்ளடங்கிய சிறந்த திரைப்படத் தொகுப்பு காண்பிக்கப்படவுள்ளது.
கொழும்பில் உள்ள PVR Cinema இல் ஜனவரி 06 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 06.30 மணியளவில், பொலிவூட் ஹிட் திரைப்படமான ‘83’ திரையிடலுடன் இத்திரைப்பட விழாவானது ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது.
கொழும்பிற்கு மேலதிகமாக பதுளை, யாழ்ப்பாணம், காலி, குருநாகல், மாத்தளை, மாத்தறை மற்றும் நுவரெலியா ஆகிய இடங்களிலும் இவ்விழா கொண்டாடப்படவுள்ளது.
இத்திரைப்பட விழாவிற்கான அனுமதி இலவசம் என்பதுடன் அதற்கான அனுமதி சிட்டைகளை பெற்றுக்கொள்ள dir.icc.colombo@gmail.com மின்னஞ்சலைத் தொடர்புகொள்ளவும்.