
2025ஆம் ஆண்டிற்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று ஆரம்பமானது.
இன்று ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வானது எதிர்வரும் 10ஆம் திகதி வரை இடம்பெற உள்ளது. சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் அண்மையில் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு கூடத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதன்படி, இன்று காலை 9.30 முதல் 10.30 வரை வாய்மூல கேள்வி பதிலுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை, 2024ஆம் ஆண்டின் மத்திய நிதி நிலை அறிக்கை தொடர்பில், ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.
அத்துடன் நாளைய தினம் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டளை சட்டதின் கீழான ஒழுங்கு விதி, அந்நிய செலாவணி சட்டதின் கீழான கட்டளைகள், கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டதின் கீழான ஒழுங்கு விதி, ஒழுங்குபடுத்தப்பட்ட சீட்டாட்டத் தொழில் சட்டதின் கீழான ஒழுங்கு விதிகள் தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளன.
எதிர்வரும், 9ஆம் திகதி, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டதின் கீழான கட்டளை, விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டதின் கீழ் பிரசுரிக்கப்பட்ட 6 கட்டளைகள், நலன்புரி நன்மைகள் சட்டதின் கீழ் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்கு விதி என்பன விவாதிக்கப்படவுள்ளன.
ஜனவரி 10ஆம் திகதி, மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் முன்வைக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.