
நுவரெலியா பொது வைத்தியசாலையில் கண்புரை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு பார்வையிழந்த நோயாளர்களுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (07) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் கூறியதாவது,
“நுவரெலியா பொது வைத்தியசாலையில் கண்புரை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பல நோயாளர்கள் பார்வையிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இவர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டு அக்குழுவின் அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது.
இதில் பார்வையிழந்த 17 நோயாளர்களுக்கு அரசினால் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என நேற்று அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது. இதுபோன்ற இழப்பீடு வழங்குவது இதற்கு முன் நடந்ததில்லை. எனவே, நாங்கள் இப்போது இழப்பீட்டு முறையைத் தயாரித்து வருகிறோம். அது மாத்திரமன்றி, இந்த மருந்தை இறக்குமதி செய்வதற்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
எனவே இது குறித்து ஒவ்வொன்றாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனுடன் தொடர்புடைய அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிடுகிறோம்” என்றார்.