
பொதுத்தேர்தலுடன் தொடர்புடைய வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகி வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொதுத்தேர்தலில் போட்டியிட்ட வேட்ப்பாளர்களுக்கு, வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த போதும், அந்தக் காலம் நிறைவடைந்தும் அவர்கள் அதனை சமர்ப்பிக்கவில்லை.
இதனால், வேட்பாளர்கள் தொடர்பான கோப்புகளை பூரணப்படுத்தி சட்ட நடவடிக்கைகளுக்காக விரைந்து பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்தநிலையில், எதிர்வரும் வாரத்தில் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை வழங்காத 5 ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 38 பேர் போட்டியிட்ட நிலையில், 12 வேட்பாளர்கள் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை வழங்காமல் இருப்பதுடன், அவர்களில் 7 பேர் மீது இதுவரை வழக்குத் தொடரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.