போலியான சாரதி அனுமதிப்பத்திரம் தயாரித்தவர்கள் கைது!

போலியான சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் பிற வாகன உரிமங்களை தயாரித்து பணம் பெறும் மோசடியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் பொலன்னறுவை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மனம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, சாரதி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் வாகனப் பதிவு சான்றிதழ்களை தயாரிப்பது தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்களை பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தேக நபரிடமிருந்து, 19 போலி சாரதி அனுமதிப்பத்திரங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

மேலும் சந்தேக நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில், வேரஹெர மோட்டார் வாகன சாரதி அனுமதிப்பத்திர அலுவலகம் அருகே சாரதி பயிற்சி பாடசாலை நடத்தும் ஒருவரையும், நாரஹேன்பிட்ட மோட்டார் வாகன சாரதி அனுமதிப்பத்திர அலுவலகம் அருகே போலி உரிமங்களைத் தயாரித்த ஒருவரையும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 39 மற்றும் 60 வயதுடைய பொரலஸ்கமுவ மற்றும் நாரஹேன்பிட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்தேகநபர்களிடமிருந்து மூன்று போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள், ஆறு கைப்பேசிகள், ஒரு கணினி மற்றும் இதற்காகப் பயன்படுத்தப்பட்ட பல ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மனம்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் மனம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply