
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட டிக்கோயா ஸ்ரீவாணி ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் சுமார் 50 மாணவர்களுக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் நேற்று (10) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று (11) குறித்த பாடசாலைக்கு சென்று பரிசோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.
நேற்று காலை (10) பாடசாலையில் மாணவர்களுக்கு காலை உணவாக சோறு, போஞ்சி, பருப்பு மற்றும் கீரை ஆகியவற்றை வழங்கியதாகவும், எனினும் அந்த உணவை சாப்பிடாத மாணவர்களும் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதனால், பாடசாலையில் உள்ள குடிநீரினால் எதுவும் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகித்த அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் பொது சுகாதார பரிசோதகர்கள், இன்றைய தினம் (11) பாடசாலைக்கு விஜயம் செய்து குடிநீர் மாதிரிகளை சேகரித்துள்ளதோடு, தொடர்ந்தும் இச்சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.