வாகனங்களுக்கான இறக்குமதி வரி 500 வீதமாக அதிகரிக்கலாம்- வாகன இறக்குமதியாளர்கள் சங்கம்!

வாகனங்களுக்கான இறக்குமதி வரி தற்போது 300 வீதமாக காணப்படுகின்ற பட்சத்தில், இந்த எண்ணிக்கை 400 வீதம் அல்லது 500 வீதமாக அதிகரிக்கக் கூடும் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வட் (VAT) உட்பட மூன்று வகையான வரிகள் வாகன விலை உயர்வைப் பாதித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானேஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறியதாவது,

வாகனங்களுக்கான வரி விதிப்பு தொடர்பில் அரசாங்கம் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டிருந்தாலும், அது வாகன இறக்குமதிகளுக்கு விதிக்கப்படும் கலால் வரி சதவீதங்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளது என்று சங்கத்தின் தலைவர் பிரசாத் மானேஜ் விளக்கினார்.

அதாவது வாகனத்தின் மதிப்பு, ஆடம்பர வரி, சுங்க வரி, செலவு, காப்பீடு மற்றும் சரக்கு வரி (CIF) மற்றும் தற்போதுள்ள 18 வீத வட் ஆகியவற்றின் அடிப்படையில் சிறப்பு இறக்குமதி வரி உட்பட பல அடுக்கு வரிவிதிப்புகளைக் கணக்கிட்ட பிறகு ஒரு வாகனத்தின் இறுதி விலை தீர்மானிக்கப்படுகிறது.

எனவே, பொது மக்கள் பீதி அடைய வேண்டாம். சமீபத்திய வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வரிகள் அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட இறுதி வாகன வரியைக் குறிக்கவில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.

வாகன இறக்குமதியைத் தொடங்குவதற்கு முன்பு முன்கூட்டியே பணம் செலுத்துதல் அல்லது வாகன முன்பதிவுகளைச் செய்வதற்கு எதிராகவும் அவர் அறிவுறுத்தினார்.

மேலும், தற்போதைய வாகன சந்தையை விட விலை சற்று அதிகமாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2020ஆம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக வாகனங்கள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்தி, கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

எனினும், சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டதாலும், நாட்டின் வெளிநாட்டு இருப்புக்கள் மேம்பட்டதாலும், பொருளாதாரம் ஸ்திரமடைந்ததாலும் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி, கடந்த ஆண்டு செப்டம்பர் 12ஆம் திகதி நடைபெற்ற அரசாங்க அமைச்சரவையின் ஒப்புதலின்படி வாகன இறக்குமதிக்கு மூன்று கட்டங்களாக அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், மோட்டார் வாகன இறக்குமதிக்கான புதிய வரி திருத்தங்களை உள்ளடக்கிய ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு நேற்று முன்தினம் (11) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதன் விளைவாக, எரிபொருள் மூலம் இயங்கும் மற்றும் மின்சார வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் கலால் வரி, வாகனத்தின் சிலிண்டர் திறன் மற்றும் மற்றும் உற்பத்தி ஆண்டு ஆகியவற்றின் அடிப்படையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய வாகன இறக்குமதியின் போது விதிக்கப்படும் வரிகள் தொடர்பில் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் கூறுகையில்,

* வேகன் ஆர் காரின் வரி, சுமார் ரூ.1.6 மில்லியனாக இருந்தது எனினும் புதிய திருத்தத்தின் மூலம் ரூ.1.8 மில்லியனை தாண்டக்கூடும்.

* மேலும், சுமார் ரூ.2 மில்லியனாக இருந்த விட்ஸ் வகை காரின் இறக்குமதி மீதான வரி சுமார் ரூ.2.4 மில்லியனாக அதிகரிக்கக்கூடும்.

* டொயோட்டா அக்வா, கொரோலா மற்றும் ஆக்சியோ மொடல்களுக்கான வரி முன்னர் ரூ. 5.7 மில்லியனாக இருந்தது, இது சுமார் ரூ. 6.6 மில்லியனாக அதிகரிக்கும் என்றும் வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் கூறுகிறது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply