நேற்று முன்தினம் (11) கண்டி தவுலாஹல பகுதியில் வைத்து 16 வயது மாணவி கடத்தப்பட்ட சம்பவம் பாப்பரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அவ்வேளையில் குறித்த மாணவியை காப்பாற்ற முயன்ற இளைஞர் காயமடைந்துள்ளார்.
மாணவி கடத்தப்பட்டபோது, அவரை காப்பாற்ற முயன்ற இளைஞர் அந்த சம்பவம் தொடர்பாக கூறுகையில்,
“நான் அந்த வாகனத்துக்குள் ஓரளவு ஏறிவிட்டேன். அந்த மாணவியை விடுவிக்க முயன்றேன். வாகனத்தில் மூவர் இருந்தனர். அவர்கள் தொடர்ந்து வாகனத்தை செலுத்தினார்கள். என்னை வாகனத்திலிருந்து கீழே தள்ளிவிட்டனர்.நான் வீதியில் விழுந்தேன். அவ்வேளை தலை, கை, காலில் காயங்கள் ஏற்பட்டன” என குறிப்பிட்டுள்ளார்.
சனிக்கிழமை மாலை மாணவியொருவர் கடத்தப்படுவதை காண்பிக்கும் வீடியோ வெளியாகியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திஇருந்த நிலையில், அந்த மாணவியை காப்பாற்ற முயன்றமைக்காக குறித்த இளைஞனை சமூக ஊடகங்களில் பலர் பாராட்டியுள்ளனர்.
ஹந்தெச பகுதியில் விடுதியொன்றில் தங்கி கல்வி கற்றுவந்த மாணவி தனது நண்பிகளுடன் பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த வேளையே கடத்தப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாணவியை கடத்தியவர் மாணவியின் தந்தை வழி உறவினர் என தெரிவித்துள்ள பொலிஸார் திருமண விவகாரமே இதற்கு காரணம் என குறிப்பிட்டுள்ளனர்.
வாகன சாரதியை கைதுசெய்துள்ள பொலிஸார் வாகனத்தை கைப்பற்றியுள்ளமையம் குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், கண்டி தவுலகல பகுதியில் வேனில் கடத்திச் செல்லப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறை பேருந்து தரிப்பிடத்தில் பேருந்தில் இருந்த போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இன்று (13) காலை கண்டிக்கு புறப்படவிருந்த சொகுசு பேருந்தில் இருந்த போது, கடத்திச் சென்ற நபரையும், குறித்த மாணவியையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றிரவு (12) அம்பாறை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இருவரும் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் மாணவியை கடத்திய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மாணவியிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
