2024 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணைப் பரீட்சைகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், புத்தளம் , கற்பிட்டி – பூலாச்சேனை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இன்று நடைபெறவிருந்த செயல்முறை திறன் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக சென்ற மாணவன் ஒருவன் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று (16) பிற்பகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயரிழந்துள்ளார்.
6ஆம் தரத்தில் கல்வி பயிலும் பூலாச்சேனை பகுதியைச் சேர்ந்த மபாஸ் முஹம்மது மஷாப் எனும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் ஏற்கனவே ஆஸ்மதுமா (வீசிங்) எனும் நோயினால் அவதிப்பட்டு வந்திருந்த நிலையில், பாடசாலைக்கு வருகை தந்த பின்னர் திடீரென வீசிங் நோயால் அவதிப்பட்டுள்ளார்.
வீசிங் நோய்க்காக பயன்படுத்தும் இன்ஹேலர் எனும் இயந்திரத்தை பாவித்த போதிலும், தனக்கு மூச்சு எடுப்பதற்கு சிரமமாக உள்ளதாக அந்த மாணவன் ஆசிரியை ஒருவரிடம் கூறியுயுள்ளார்.
இதனையடுத்து, உடனடியாக அங்கிருந்த ஆசிரியர்கள் குறித்த மாணவனை மாம்புரி கிராமிய வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அந்த மாணவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நுரைச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.