
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி நடாத்த முடியும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
எதிர்வரும் 18 மற்றும் 19ஆம் திகதிகளில் இந்த சட்ட மூலம் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம் நடாத்த ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்று தீர்ப்பளிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை நிறைவு செய்த உயர் நீதிமன்றம், தனது இரகசிய தீர்ப்பை ஜனாதிபதி மற்றும் சபாநாயகருக்கு அனுப்புவதாக 27 ஆம் திகதி அறிவித்திருந்தது.
எனினும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் தமக்குக் கிடைக்கவில்லை என்று சபாநாயகர் இன்று (05) நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் இதனை தெரிவித்தார்.
என்றாலும், உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் கடந்த 27ஆம் திகதியே கிடைக்கப்பெற்றுவிட்டதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.