
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் உள்ள மூன்று மின்பிறப்பாக்கிகள் செயலிழந்ததால் மின்சாரத் தேவையை நிர்வகிக்க, இலங்கை மின்சார சபை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஒன்றரை மணி நேரம் மின் விநியோகத் துண்டிப்பை அமுல்படுத்த நடவடிக்கை எடுத்தது.
அதன் பராமரிப்புப் பணிகளை விரைவாக முடித்த பின்னர், மின்பிறப்பாக்கிகளை இயக்க நடவடிக்கை எடுப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்திருந்தது.
அதன்படி நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்தில் உள்ள மூன்று மின் பிறப்பாக்கிகளில் ஒன்று சரிசெய்யப்பட்டு, தற்போது தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதன் ஊடக 300 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புக்கு பெறப்படுகிறது.
இந்நிலையில், தடையற்ற மின்சார விநியோகத்தில் ஏற்படும் இடையூறுகளைச் சமாளிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதால், இன்று முதல் நாளாந்த மின்வெட்டை அமுல்படுத்துவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாட்டில் இதுவரை ஏற்பட்டுள்ள ஏற்பட்ட மின்தடையால் ஏற்பட்டிருந்த சிரமத்துக்கு அமைச்சர் குமார ஜெயக்கொடி வருத்தம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டில் மீண்டும் இதுபோன்ற நிலை ஏற்படாமல் தடுப்பதற்கு தேவையான குறுகிய கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.