நாட்டின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்- சஜித் பிரேமதாச!

நீதிமன்ற வளாகத்தினுள் நடந்த கொலை, நீதிமன்றத்தை மட்டுமன்றி ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்று (20) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

நீதித்துறையில் பெரும் பணிகளை ஆற்றிவரும் நீதிபதிகளுக்கு குறிப்பிட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டாலும், அண்மைய காலங்களில் அவர்களின் பாதுகாப்பை நீக்குவதாக அவர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சஜித் பிரேமதாச மேலும் தெரிவிக்கையில்,

சிவில் குடிமக்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் கூட இன்று பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஊடகவியலாளரான சம்முதிதவுக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால் இன்று அந்த பாதுகாப்பு அவரிடமிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எனவே மக்களினதும், ஊடகத்துறையில் பணியாற்றுபவர்களினதும் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். கனம் நீதவான் நீதிமன்றத்தினுள் நடந்த இந்த சம்பவம் குறித்து விசேட விசாரணையை நடத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவ்வாறே மக்கள் பிரதிநிதிகளினது பாதுகாப்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.

இதுபோன்ற கொலைச் சம்பவங்கள் மூலம் நீதித்துறைக் கட்டமைப்பு பலவீனப்பட்டு முழு சமூகமே சீரழிந்து போகும். எனவே நீதிபதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள். கடந்த காலங்களில் தேசிய பாதுகாப்பு தொடர்பில் டியுசன் தர வெளிக்கிட்டவர்கள், போதைப்பொருள் வியாபாரிகளை இரண்டு போயாவைத் தொடர்ந்து இல்லாதொழிப்போம் என கூறிய தற்போதைய அரசாங்கம், அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply