
2025 வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
2025 வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தைத் தொடர்ந்து இன்று (25) வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
அதன்படி, இன்று காலை 9.30க்கு நாடாளுமன்றம் கூடிய நிலையில், வரவு செலவு திட்ட விவாதம் காலை 10.00 மணிக்கு ஆரம்பித்து மாலை 6:00 மணி வரை தொடரும். அதன்பின்னர், இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்படும்.
இன்று நடைபெறும் இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பின் போது வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றக் குழு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார கருத்து தெரிவிக்கையில்,
“தற்போதைய அரசாங்கம் தேர்தலில் கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
விலையேற்றம், வரிக் குறைப்பு, மருந்து பொருட்களின் விலைக் குறைப்பு, அரச பணியாளர்களை ஏமாற்றியுள்ளது, ஐஎம்எப் மறுசீரகை்கப்படவில்லை என பல வாக்குறுதிகளை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்ற தவறியுள்ளது.
இத்தகைய காரணங்களால் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க எதிர்க்கட்சியாக நாம் தீர்மானித்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.
மேலும், இலங்கை தமிழரசுக் கட்சி தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு இம்முறை வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.