
மின்கட்டண சூத்திரத்தை மக்களுக்கு சார்பானதாக மாற்றியமைப்பதாக கூறியிருந்த அரசாங்கம் எதிர்காலத்தில் மின்கட்டணம் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளமையானது பிரச்சினைக்குரிய விடயம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இன்றைய (25) நாடாளுமன்ற அமர்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேர்தல் காலத்தில் ஆளுந்தரப்பினர் ரூ.9000 மின்சார கட்டணத்தை ரூ.6000 ஆகவும், ரூ.3000 மின்சார கட்டணத்தை ரூ. 2000 ஆகவும் அமையும் விதமாக 1/3 ஆக குறைப்போம் என்று தெரிவித்தனர். மின்கட்டண சூத்திரத்தை மக்கள் சார்பானதாக மாற்றியமைப்போம் எனவும் தெரிவித்திருந்தனர்.
மக்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்ததன் பிரகாரம் மின்சார கட்டணம் 20% குறைக்கப்பட்டது. இது இவ்வாறு இருக்க விரைவில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும் என மின்சக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் மின்கட்டணம் அதிகரிக்கப்படும் என அரசாங்கம் அறிவிப்பை விடுவதில் பிரச்சினை எழுந்துள்ளது.
இவ்வாறு மின்கட்டணம் மேலும் அதிகரிக்கும் போது இது புதிய முதலீடுகளுக்கும் பொதுமக்களும் பாதிப்பை ஏற்படுத்தும். இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கின்றேன்.” என்று தெரிவித்திருந்தார்.