யாழ்ப்பாணம் – அரியாலை சித்துப்பாத்தி மயானத்தில் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பான வழக்கு இன்று (28) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக அரியாலை – செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு பின்னர் யாழ். நீதவான் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனையடுத்து இது தொடர்பில் ஆராய யாழ் நீதவான், சட்ட மருத்துவ அதிகாரி தடயவியல் காவல்துறையினர், நல்லூர் பிரதேச செயலாளர் ஆகியோர் குறித்த இடத்துக்கு சென்று நிலைமைகளை நேரில் அவதானித்தார்.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்படவிருந்த நிலையில், நீதவான் நீதிமன்றுக்கு சமுகமளிக்காமையால், வழக்கை விசாரித்த பதில் நீதவான் வழக்கை இன்றைய தினத்துக்கு ஒத்தி வைத்தார்.
அதன்படி இன்றைய தினம் வழக்கு விசாரணை இடம்பெறவுள்ளதுடன், சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கைகள் மன்றுக்கு சமர்ப்பிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
