
கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உடந்தையாக இருந்த பிரதான சந்தேகநபரான இஷார செவ்வந்தியைக் கைது செய்ய நாடு முழுவதும் 11 பொலிஸ் குழுக்களைப் பயன்படுத்தி சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மற்றொரு பொலிஸ் குழு தேவையான நடவடிக்கைகளுக்காக துபாய்க்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், கொழும்பு குற்றப்பிரிவைச் சேர்ந்த இரண்டு சிறப்புக் குழுக்களும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வெளிநாட்டு பாதாள உலகத் தலைவர்களையும், கொலையை திட்டமிட்டவர்களையும் விரைவில் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும்.
சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி, வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முடியவில்லை. அவர் இந்த நாட்டில் தான் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்பட்டு வருவகின்றன. விரிவான விசாரணைகளும் நடாத்தப்பட்டுகின்றன.
துபாயில் இருந்து கொலை எவ்வாறு திட்டமிடப்பட்டது, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் அந்தப் பெண் துப்பாக்கிச் சூடு நடத்தியவருடன் எவ்வாறு நட்பாக இருந்து கொலையைத் திட்டமிட்டார் என்பது குறித்து பொலிஸ் விசாரணைகள் மூலம் பல தகவல்கள் தெரியவந்துள்ளதாக அமைச்சர் சுனில் வட்டகல சுட்டிக்காட்டியுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட நபர் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது கொலைக்கான துப்பாக்கிச் சூடு நடத்துபவராக அவருக்கு பயிற்சி அளிக்க எளிதாக்கியதாக கூறப்படுகின்றது.
இந்தக் கொலைக்கு உதவிய பொலிஸ் அதிகாரிகள் குறித்தும் புலனாய்வு அமைப்புகள் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
துபாயில் இருந்து திட்டமிடப்பட்ட குற்றவியல் கொலைகளில் பொலிஸ் அதிகாரிகளின் தொடர்பு மற்றும் அவர்கள் பாதாள உலகக் கும்பல் உறுப்பினர்களுடன் தகவல்களைப் பரிமாறிக் கொண்டார்களா என்பது குறித்தும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் சுனில் வட்டகல மேலும் தெரிவித்துள்ளார்.