ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது வெளிநாட்டு பயணங்களின் போது அரைக் கட்டணத்தை செலுத்தியா பயணம் செய்தார் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கேள்வியெழுப்பியுள்ளார்.
இன்றைய (28) நாடாளுமன்ற அமர்விலேயே அவர் இந்த கேள்வியை எழுப்பினர்.
முன்னாள் ஜனாதிபதிகள் தமது நிர்வாகத்தின் போது வெளிநாட்டு பயணங்களுக்கு செலவிடப்பட்ட பணம் தொடர்பில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது வெளிப்படுத்தியிருந்தார்.
இதன்போது அனுரகுமார திஸாநாயக்கவிற்கு 2024 ஆம் ஆண்டு முதல் 2025 பெப்ரவரி மாதம் வரையான காலப்பகுதியில் 1.8 மில்லியன் ரூபா மாத்திரமே செலவிடப்பட்டதாக பிரதமர் தெரிவித்திருந்தார்.
இதனை அடிப்படையாக கொண்டே நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, “ஜனாதிபதி அநுர இதுவரை சீனா, இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மூன்று நாடுகளுக்கு விஜயம் செய்துள்ளார். ஜனாதிபதியின் இந்த வெளிநாட்டு பயணங்களுக்கு 1.8 மில்லியன் செலவாகியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. 11 பேருடன் சென்றுள்ள ஜனாதிபதிக்கு 1.8 மில்லியன்தான் செலவு என்றால், எதிர்க்கட்சியின் உள்ள அனைவரும் குறித்த மூன்று நாடுகளுக்குச் சென்றுவருவோம். இது மிகவும் சுவராஷ்யமாக உள்ளது” என்று விமர்சித்துள்ளார்.
