
கனேமுல்ல சஞ்சீவவின் மரணம் தொடர்பில் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இன்று (28) தீர்ப்பளித்தார்.
இந்த சம்பவம் தொடர்பான இரண்டு நாள் விசாரணையின் முடிவில் தலைமை நீதவான் இந்த உத்தரவை வௌியிட்டார்.
அதன்படி கனேமுல்ல சஞ்சீவவின் மரணம் துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் மார்பு, கழுத்து மற்றும் வயிற்றில் ஏற்பட்ட பல காயங்களால் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கனேமுல்ல சஞ்சீவவின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை கொழும்பு குற்றப்பிரிவினால் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தீர்ப்பை அறிவித்த தலைமை நீதவான், விசாரணையின் போது மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகள் மற்றும் கொழும்பு தடயவியல் வைத்திய அதிகாரி அலுவலகம் சமர்ப்பித்த பிரேத பரிசோதனை அறிக்கையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக தெரிவித்தார்.
இதேவேளை, இந்த விசாரணை கொழும்பு தலைமை நீதவான் முன்னிலையில் அழைக்கப்பட்டபோது, உயிரிழந்த கனேமுல்ல சஞ்சீவவின் சகோதரி தில்ருக்ஷி சமரரத்ன சாட்சியமளித்தார்.
கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகளின் வழிகாட்டுதலின் கீழ் சாட்சியமளித்த சகோதரி,
“சஞ்சீவ என்னுடைய தம்பி. இந்தச் சம்பவத்திற்கு முன்பு, அவர் பூஸா சிறையில் இருந்தார். நான் வாரத்திற்கு இரண்டு முறை என் தம்பியைப் பார்க்கச் சிறைக்குச் செல்வேன். அவருக்கு என்னென்ன வழக்குகள் உள்ளன என்பது குறித்து எனக்குத் தெரியாது.
கடந்த 19 ஆம் திகதி வழக்கு ஒன்றிற்காக அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டதை நான் அறிந்திருக்கவில்லை. அன்று காலை, சுமார் 10:30 அல்லது 11:00 மணிக்கு, எனக்கு ஒரு அழைப்பு வந்தது. என் சகோதரன் சுடப்பட்டதாக அவர்கள் சொன்னார்கள். அதே நேரத்தில், நான் சட்டத்தரணி லக்ஷ்மன் பெரேராவை அழைத்தேன். அவர் சுடப்பட்டதாகக் கேள்விப்பட்டதாகக் கூறினார். பின்னர் நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அறிந்தேன்.
கடந்த 20 ஆம் திகதி கொழும்பு தடயவியல் வைத்திய பரிசோதகர் அலுவலகத்தில் நடைபெற்ற பிரேத பரிசோதனையில் நான் கலந்து கொண்டேன். இதன்போது உயிரிழந்தவர் சஞ்சீவ குமார சமரத்ன என நான் அடையாளம் கண்டேன். பின்னர் வாழைத்தோட்டம் பொலிஸாருக்கு வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுத்தேன்.” பின்னர், நானும் என் அம்மாவும் உடலை ஏற்றுக்கொண்டோம்,” என்று அவர் சாட்சியமளித்தார்.
இதன்போது, பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் சாட்சியங்களை முன்வைத்து, உயிரிழந்த சஞ்சீவ குமார சமரரத்ன மீதான துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து முழுமையான விசாரணை அவசியம் என்று சுட்டிக்காட்டினர்.
மேலும், அவரது பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகளின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்துவது முக்கியம் என்றும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.
முன்வைக்கப்பட்ட அனைத்து உண்மைகளையும் பரிசீலித்த நீதிபதி, மரணத்திற்கான காரணத்தைக் கூறி தீர்ப்பை அறிவித்தார்.
மேலும், இந்த வழக்கை எதிர்வரும் மார்ச் 7 ஆம் திகதி மீண்டும் விசாரிக்க உத்தரவிடப்பட்டது.