ஹட்டன் பகுதியில் அரச பேருந்து நடத்துநர் ஒருவர் பாடசாலை மாணவர்களை பலவந்தமாக பஸ்ஸில் இருந்து வெளியேறுமாறு பணித்த சம்பவம் ஒன்று நேற்று (06) இடம் பெற்றுள்ளது.
நாவலபிட்டியில் இருந்து கினிகத்தேனை ஊடாக ஹட்டனுக்கு பயணிகளை ஏற்றிச்செல்லும் அரச பேருந்து நடத்துநர், ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட கினிகத்தனை கடவளை விக்னேஸ்வரா கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களை பஸ்ஸில் இருந்து வெளியேறுமாறு கூறியுள்ளார்.
குறித்த மாணவர்கள் பாடசாலை மாணவர்களுக்கு என்று இலங்கை போக்குவரத்து சபையின் ஊடாக வழங்கப்படும் பருவச் சீட்டை, பேருந்து நடத்துநரிடம் காண்பித்த போதும் மாணவர்களை பேருந்தில் இருந்து வெளியேறுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார்.
இதன் போது மாணவர்கள் ”இது அரச பேருந்து நடத்துநரின் சொந்த பேருந்து அல்ல பாடசாலை மாணவர்களாகிய நாங்கள் பணம் கொடுத்து பருவச்சீட்டினை பெற்றுள்ளோம் பேருந்தை விட்டு வெளியேற முடியாது” என தெரிவித்தனர்.
அதற்கு பேருந்து நடத்துநர், ‘ஆம் இது என்னுடைய பேருந்து; நீங்கள் அனைவரும் பேருந்தை விட்டு இறங்குங்கள்’ என கடுமையான தொனியில் கூறியுள்ளார்.
இது தொடர்பான காணொளி ஒன்று மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சோ. ஸ்ரீதரன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதோடு, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார்.
தமிழ் பாடசாலை மாணவர்களுக்கு நிகழும் அநீதிகள் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பழனி திகாம்பரம் ஹட்டன் டிப்போவின் முகாமையாளரிடம் தொடர்பு கொண்டு பணிப்புரை விடுத்துள்ளதுடன், இது தொடர்பில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஹட்டன் டிப்போவின் முகாமையாளர் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் குறிப்பிட்டார்.
