
முல்லைத்தீவு கோத்தபாய கடற்படை முகாமிற்கு முன்பாக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்றைய தினம் முன்னெடுத்தனர்.
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்று வரை தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இன்று காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு கோத்தபாய கடற்படை முகாமிற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டமானது வட்டுவாகல் பாலம் ஊடாக பேரணியாக சென்று வட்டுவாகல் பகுதியில் இறுதியாக கையளிக்கப்பட்ட இடத்திற்கு முன்பாக வரை சென்று நிறைவடைந்திருந்தது.
போராட்டத்தின்போது,
சர்வதேசமே பதில் சொல்,
சர்வதேசமே எமக்கான தீர்வு என்ன?,
பிள்ளைகளை தினம் தேடிக்கொண்டே நீதியின்றி இறந்து கொண்டிருக்கின்றோம்,
கொக்குதொடுவாய் மனித புதைகுழி விடயத்தை மூடி மறைக்க வேண்டாம்!
எமக்கு உண்மையும் நீதியும் வேண்டும்,
தமிழரை கடத்தாதே!
இனவழிப்பு செய்யாதே!
உங்கள் சிறைக்கூடம் எங்கள் பிள்ளைகளுக்கு என்ன கல்விக்கூடமா?
எமது நாட்டில் நாம்வாழ உரிமையில்லையா? உலகமெல்லாம் பெண்கள் உரிமை பேசும் இந்நாளிலும் தெருவில் கிடந்து அழவைத்திருக்கிறது அரசு!
முதலான பல்வேறு கோசங்களை எழுப்பியும், பதாதைகளை ஏந்தியவாறும் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த போராட்டத்தின் போது வட்டுவாகல் விகாரைக்கு செல்லும் வழியில் அதிகளவவான பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடதக்கது.