மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட 8 பேரைக் கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (28) உத்தரவிட்டது.
எனினும் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 15 நாட்கள் கடந்துவிட்ட போதிலும் இன்றுவரை அவர் தொடர்பான எந்த தகவலும் கிடைக்கவில்லை.
நீதிமன்றத்தைத் தவிர்த்து வரும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் மனைவி மற்றும் மகனிடமிருந்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் மனைவியும் மகனும் அவர்களுக்குச் சொந்தமான வீட்டிற்குத் திரும்பிய செய்தி அறிந்து, அவர்களுடைய வீட்டிற்குச் சென்று மனைவியிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹோகந்தரவில் உள்ள வீட்டில் வைத்து, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழு இந்த வாக்குமூலங்களைப் பதிவு செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், தேசபந்து தென்னகோன் இருக்கும் இடம் குறித்து எந்த தகவலும் அறியவில்லை என அவர்கள் தெரிவித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தறை நீதவான் நீதிமன்றம் முன்னாள் பொலிஸ்மா அதிபரை கைது செய்ய உத்தரவு பிறப்பித்த போதிலும், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இதுவரையில் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
