2025ஆம் ஆண்டின் வரவுசெலவுத்திட்டத்தில் துணை வைத்திய நிபுணர்களின் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு 24 மணி நேர அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் சுகாதார நிபுணர்களின் சங்கத்தால் முன்னெடுக்கப்படும் இந்த வேலை நிறுத்தம் நியாயமற்றது என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்றைய (18) நாடாளுமன்ற அமர்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நியாயமான அடிப்படை சம்பள உயர்வு வழங்கப்பட்ட போதிலும் நோயாளிகளின் உயிரைப் பணயமாக வைத்துக்கொண்டு நடத்தப்படும் இந்தப் போராட்டம் நியாயமற்றது.
எனினும் இந்த நியாயமற்ற வேலை நிறுத்தத்தில் இணையாமல் தங்கள் கடமைகளைச் செய்யும் அனைத்து சுகாதார நிபுணர்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
தமது தொழிலில் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க எந்த நேரத்திலும் நேரத்தை வழங்க ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
