உயர்நீதிமன்ற வழக்கு காரணமாக பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்யமுடியவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இன்றைய (18) நாடாளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச பட்டதாரிகள் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தற்பொழுது நாங்கள் 10,000க்கு மேற்பட்ட வேலை வாய்ப்புகளை வழங்கி வெற்றிடங்களை நிரப்பி வருகின்றோம்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் பொறுப்பான முறையில் சரியான தகவல்களை வழங்க வேண்டும்.
ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பதிலே இருக்கின்ற தடைதான் உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருக்கின்ற வழக்கு. அந்த வழக்கு காரணமாக ஆட்சேர்ப்பு செய்ய முடியாதுள்ளது.
கல்வித்துறையில் 25,000க்கு இடைப்பட்ட வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இந்த வழக்கு காரணமாக ஆட்சேர்ப்பு செய்ய முடியாது இருக்கிறது.
ஆகவே அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கு அமையவே நாம் ஆட்சேர்ப்பு செய்ய முடியும்.
அடுத்த வழக்கு தவணை ஏப்ரல் மாத ஆரம்ப பகுதியில் வருகிறது. சட்டமா அதிபர் அந்த விவரங்களை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிப்பார். உயர்நீதிமன்றம் எடுக்கின்ற தீர்மானத்திற்கு அமைவாக நாங்கள் செயற்படுவோம். எழுந்தமானதாக ஆட்சேர்ப்புகளை செய்யவில்லை.
உண்மையில் அப்படி செய்யப்பட்டால் அது பட்டதாரிகளுக்கான அவமதிப்பாக இருக்கும். எந்த பாடங்களுக்கு எந்த பாடசாலைகளுக்கு வெற்றிடங்கள் இருக்கின்றன, எந்த இடத்தில் அதை நிரப்ப வேண்டும் என்கின்ற முறையில்தான் நாங்கள் இந்த ஆட்சேர்ப்பை செய்வோம். என அவர் மேலும் தெரிவித்தார்.
