ஆண்கள் மத்தியில் வாய்ப் புற்றுநோய் தாக்கம் அதிகரித்துள்ளதாக விசேட சத்திர சிகிச்சை நிபுணர் ஆனந்த ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
உலக வாய் சுகாதார தினம் இன்று அனுஷ்டிக்கப்படும் நிலையில் சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வருடாந்தம் 3000 வாய்ப் புற்றுநோயாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்படுகின்றனர்.
வாய்ப் புற்றுநோய் காரணமாக நாளாந்தம் சுமார் மூவர் உயிரிழக்கின்றனர்.
ஆண்கள் மத்தியில் வாய்ப் புற்றுநோய் தாக்கம் அதிகரித்துள்ளது.
வாய்ப் புற்றுநோய் ஏற்படுவதை தடுப்பதற்கு இலகு வழிகள் உள்ளன. புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த உற்பத்திகள், கடித்து உண்ணும் புகையிலைப் பொருட்கள் போன்றவையே வாய்ப் புற்றுநோய் அதிகரிப்பிற்கு பிரதான காரணங்களாக அமைந்துள்ளன. அவற்றை உட்கொள்ளாமல் விடுவதன் மூலம் இதனை தடுக்க முடியும் என சத்திர சிகிச்சை நிபுணர் ஆனந்த ரத்னாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
