பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட 8 பேரைக் கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் கடந்த பெப்ரவரி மாதம் (28) உத்தரவிட்டது.
எனினும் அவர் நீதிமன்றை தவிர்த்த காரணத்தால், மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.
அதன் பின்பு, 20 நாட்கள் தலைமறைவாக இருந்த தேசபந்து தென்னகோன் நேற்று (19) நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
நேற்று காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை, இன்று (20) வரை விளக்கமறியலில் வைக்க, மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
குறித்த உத்தரவிற்கு அமைய தேசபந்து தென்னகோன் நேற்று மாலை விசேட பாதுகாப்பின் கீழ் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தேசபந்து தென்னகோனால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டதையடுத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், இன்று (20) மீண்டும் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனை ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
