இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்டு கைதாகி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்களின் விடுதலை குறித்து ஆராய தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட குழுவொன்று நாட்டுக்கு வரவுள்ளது.
அவர்கள் இன்று(25) பிற்பகல் திருச்சிராப்பள்ளியில் இருந்து கொழும்புக்கு வர உள்ளனர்.
இராமேஸ்வரத்தில் உள்ள பாரம்பரிய இந்திய கடற்றொழிலாளர் நலச் சங்கத்தின் தலைவர் வி.பி. சேசுராஜா மற்றும் நான்கு உறுப்பினர்கள் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குழுவானது பறிமுதல் செய்யப்பட்ட இந்திய கடற்றொழில் படகுகளை ஆய்வு செய்யவுள்ளதுடன், தடுத்து வைக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களை விடுவிக்கக் கோரி கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடாத்தவும் திட்டமிட்டுள்ளது.
குறித்த குழு எதிர்வரும் ஏப்ரல் 01 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை – இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினை தற்போது வரை நீடிக்கும் நிலையில் குறித்த குழு நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
