பொது போக்குவரத்து சேவைக்கு இடையூறு விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.
எதிர்காலத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு இடையூறு ஏற்படலாம் என்றும், அந்த சேவைகளை சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும் போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
கடந்த 24 ஆம் திகதி காலி – மாத்தறை பஸ் சாரதி ஒருவரை தாக்கிய சம்பவத்தை தொடர்ந்து அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் தாக்குதலை நடத்திய மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்த லொறி சாரதி மற்றும் முச்சக்கரவண்டி சாரதிக்கு எதிராக கடுமையாக சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
