சிறுவர்கள் தொடர்பான ஆபாச காட்சிகளை சமூக ஊடக வலைத்தளங்களில் பகிர்ந்த நபர் ஒருவர் சிறுவர்கள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக விசாரணை பிரிவினால் ராகம, கெந்தலியத்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ராகம பிரதேசத்தை சேர்ந்த 20 வயது இளைஞர் என தெரியவந்துள்ளது.
அமெரிக்க அரசாங்கத்தால் நிறுவப்பட்ட, காணாமல் போன மற்றும் சுரண்டப்பட்ட குழந்தைகளுக்கான தேசிய மையம் வழங்கிய அறிக்கையில் உள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதில், முகநூல் மூலம் வெளிநாட்டு பிரஜைகளுக்கு சிறுவர்கள் தொடர்பான பாலியல் காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வழங்கிய நபர் ஒருவர் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த முகநூல் கணக்கு தொடர்பாக பொலிஸார் விசாரணையை முன்னெடுத்த நிலையில், இது தொடர்பாக புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
இதன்போது பொலிஸார் சந்தேக நபருக்கு சொந்தமான தொலைபேசியை பெற்று அதனை பகுப்பாய்வு செய்த போது சந்தேக நபர் ராகம பிரதேசத்தில் வசிப்பவர் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் இருந்து ஆபாச காட்சிகள் அடங்கிய கைபேசி மற்றும் கணினி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
பொலிஸாரால் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
