பட்டலந்த வதை முகாம் மட்டுமல்ல மற்றும் பல வதைமுகாம்கள் தொடர்பில் விசாரணைகள் நடாத்தப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரும் மற்றும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று வவுனியா, குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் ஊள்ளுராட்சி மன்ற வேட்பாளர்களுக்கிடையிலான கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசியல் கைதிகளை விடுவிக்க முடியும். ஆனால் அதனை உடனடியாக செய்ய முடியாது.
நாம் ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்கள் தான் ஆகியுள்ளது. ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் இருந்தாலும் அதனை படிப்படியாக அதற்கான செயன்முறைகள் ஊடாகத் தான் செய்ய முடியும்.
காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளது. வடக்கின் கைத் தொழிற்சாலைகளை மீள இயங்கு நிலைக்கு கொண்டு வந்துள்ளோம். வரவு செலவுத் திட்டத்தில் கூட முன்னைய அரசாங்கங்கள் ஒதுக்காத அளவு அதிக நிதியை நாம் வடக்கிற்கு ஒதுக்கியுள்ளோம்.
1980 ஆம் ஆண்டு காலப் பகுதியல் படலந்த வதை முகாம் மாதிரி பல வதை முகாம்கள் இருந்தன.
தெற்கில் ஜேவிபி, யுஎன்பி பிரிந்து இருந்தது போன்று, வடக்கில் எல்ரீரீஈ, ஈபிடிபி, ஈபிஆர்எல்எப் என பிரிந்து செயற்பட்டு இருந்தார்கள்.
வதை முகாம்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும். தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் என எல்லோருமே பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
அணைத்து பிரச்சனைகளையும் உடனடியாக விசாரிக்க முடியாது. படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு இந்த நாட்டில் ஒரு நல்லிணக்கத்தை மீள கட்டியெழுப்ப வேண்டும் எனத் தெரிவித்தார்.
