பழைய அரசாங்கங்களைப் போல பொய் கூறாமல், பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவோம் என சிவில் விமான போக்குவரத்து சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திற்கு நேற்று திடீர் விஜயம் மேற்கொண்ட போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
பழைய அரசாங்கம் போல் நாம் பொய் கூற மாட்டோம். விமான நிலையத்தின் திட்டமிடல் வரைபடம் உள்ளிட்ட பல்வேறு வேலை திட்டங்கள் நிறைவடைந்துள்ளன எனவே அதனுடைய திட்டமிடலுக்கு ஏற்ப நான்கு மாதங்களுக்குள் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைக்கப்படும் என தெரிவித்தார்.
பலாலி விமான நிலையத்தை முதல் தடவையாக பார்வையிட்ட அமைச்சர், விமான நிலையத்தின் சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் ஹர்ச அபய விக்ரம மற்றும் ஏனைய ஊழியர்களிடமும் விமான நிலையத்தின் விஸ்தரிப்புகள் தொடர்பிலும், அதன் சேவைகள் தொடர்பிலும் கேட்டறிந்தார்.
இதன்போது கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், வைத்தியர் ஸ்ரீ பவானந்தராஜா ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
