உள்நாட்டு போரில் பலர் கொள்ளப்பட்டது தொடர்பில் உள்ளக பொறிமுறையின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்- தயாசிறி எம்.பி!

யுத்தத்தின் போது பலர் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை ஏற்கிறோம். ஆனால் அது குறித்த விசாரணைகள் உள்ளக பொறிமுறையின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

குருணாகலில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இதற்கு முன்னர் 58 பேருக்கு எதிராக தடை விதிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இதனை வழக்கமாகக் கொண்டுள்ளன.

எனினும் பிரித்தானியா தடை விதிப்பது இதுவே முதன்முறையாகும்.

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 16 ஆண்டுகளின் பின்னர் இவ்வாறான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

பட்டலந்த ஆணைக்குழுவில் ஆரம்பித்தது இன்று இந்த நிலைமையில் வந்து நிற்கின்றது.

பட்டலந்த வதை முகாம் தொடர்பில் ஆணைக்குழு அமைத்து விசாரணைகளை முன்னெடுப்பதாயின் உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புலம் பெயர் தமிழர்கள் உள்ளிட்ட தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

எனவே வெளிநாடுகளின் இவ்வாறான செயற்பாடுகள் முற்றாக நிராகரிக்கப்பட வேண்டியவையாகும். ஆனால் வெளிவிவகார அமைச்சு இந்த விவகாரத்தில் அமைதியாகவுள்ளது.

இதே நிலைமை தொடர்ந்தால் இது நாட்டுக்கே அச்சுறுத்தலாக அமையும். எனவே இவ்வாறான விடயங்களில் நேர்மையாகவும், வெளிப்படை தன்மையுடனும் தீர்மானங்களை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

யுத்தத்தின் போது பலர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயமாகும். ஆனால் அது குறித்த விசாரணைகள் உள்ளக பொறிமுறையின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply