யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் ஒருவர் பகடிவதை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளமையால், குறித்த மாணவனுக்குப் பாதுகாப்பளிக்குமாறும், பகடிவதைக்கு எதிராக நீதியான விசாரணைகள் மேற்கொள்ளக் கோரியும் பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
நாத்தாண்டியா பகுதியைச் சேர்ந்த மாணவன் ஒருவரின் தந்தையே இவ்வாறு முறைப்பாடு அளித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கடந்த 27ஆம் திகதி வியாழக்கிழமை பல்கலைக்கழக விடுதியில் இருந்து விரிவுரை செலவதற்காக பல்கலைக்கழகத்துக்கு நடந்து வந்து கொண்டிருந்த புதுமுக மாணவனை விரிவுரைக்குச் செல்லவிடாமல் தடுத்த சிரேஷ்ட மாணவர்கள் சிலர், அவரை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றி தனியார் மாணவ விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு வைத்து குறித்த மாணவனையும் வேறு சில புதுமுக மாணவர்களையும் சிரேஷ்ட மாணவர்கள் கடுமையான சித்திரவதைகளுக்குள்ளாக்கி இருக்கின்றார்கள்.
இதன்போது முறைபாடு செய்தவரின் மகனை ஹெல்மெட்டால் தாக்கியுள்ளார். இதனால் அந்த மானவனின் ஒரு காது கேட்கும் திறனை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் தாக்குதல் காரணமாக மாணவன் மயக்கமடைந்த நிலையில் மாணவனுக்கு கட்டாயப்படுத்தி பனடோல் பருக்கிய பின்னர், தனியார் விடுதியிலிருந்து துரத்தி விட்டிருக்கின்றார்கள்.
குறித்த மாணவன் கூகிள் வரைபட உதவியுடன் பல்கலைக்கழக விடுதிக்குச் சென்று அங்கிருந்து அம்புலன்ஸ் மூலமாக வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்றதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் உடலளவிலும், உளரீதியாகவும் பாதிக்கப்பட்ட தனது மகனுக்குப் பாதுகாப்பளிக்குமாறு கோரியும் பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
மேலும் இது தொடர்பில் பொலிஸ் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
