
யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் பகடிவதை காரணமாகப் பாதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் பகடிவதை காரணமாகப் பாதிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் இரண்டாம் வருட சிரேஷ்ட மாணவர்கள் நான்கு பேருக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் நிறுவனமயப்படுத்தப்பட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் பு.ரவிரஜன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய காரியாலயமானது, 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்டத்தின் பிரவு 14 இன் பிரகாரம் ஆணைக்குழுவின் சொந்த பிரேரணையில் அடிப்படையில் கவனம் செலுத்தியுள்ளது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில்,
1998 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க கல்வி நிறுவனங்களில் பகிடிவதை மற்றும் வேறுவகையான வன்செயல்களை செய்வதானது இலங்கையின் மிகக் கடுமையான குற்றங்களில் ஒன்றாகவும், பிணை வழங்கப்படாத குற்றமாகவும் பிரகடனப்படுத்தியுள்ளது.
மேலும், பகிடிவதை செய்யும் அல்லது ஊக்குவிக்கும் எந்தவொரு நபரும் பிடியாணை இல்லாமல் கைது செய்யப்படலாம் என்ற ஏற்பாடுகளையும் கொண்டுள்ளது
எனவே, யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மேற்குறித்த பகிடிவதை சம்பவம் தொடர்பில் உடனடி சட்ட நடவடிக்கை எடுத்து அது தொடர்பிலான அறிக்கையினை எதிர்வரும் 04.04.2025 இற்கு முன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயத்துக்கு அனுப்பிவைக்குமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர், கோப்பாய் பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் யாழ்ப்பாண பிராந்திய போலீஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.