
கணேமுல்ல சஞ்ஜீவ கொலை சம்பவம் தொடர்பில் தலைமறைவாக உள்ள முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி அனுராதபுரம் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, அவரது தோற்றத்திற்கு மிகவும் ஒத்த பெண்ணொருவர் போதைப்பொருள் தொகையுடன் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்ஜீவ கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி, புதுக்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்றத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்ட நிலையில், துப்பாக்கிச்சூட்டை நடத்தியவருக்கு பின்புர தேவகே இஷாரா செவ்வந்தி என்ற 25 வயதுடைய பெண் உதவி செய்தமை தெரியவந்தது.
எனினும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட நாள் முதல் இன்று வரை அவர் தலைமறைவாக உள்ளார்.
அத்துடன் சந்தேக நபரை கைது செய்வதற்கு துல்லியமான தகவல் வழங்குபவருக்கு 12 இலட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும் பொலிஸ் தலைமையகம் தீர்மானித்து அறிவித்திருந்தது.
இந்த நிலையிலேயே அவர் போன்ற தோற்றம் கொண்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.