
நீதிமன்ற உத்தரவுகளை மீறி சுகாதார அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரையும், மற்றொரு நபரையும் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மார்ச் 27 ஆம் திகதி நீதிமன்ற உத்தரவுகளை மீறி சுகாதார அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக 27 பேர் மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளரான மதுஷன் சந்திரஜித் உள்ளிட்ட தரப்பினர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளரான மதுஷன் சந்திரஜித் உட்பட இருவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
அத்துடன் கைது செய்யப்பட்ட மற்ற 25 பேரையும், 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையின் கீழ் விடுதலை செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்தநிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இருவரும் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது பிணையில் விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அவர்கள் இருவரையும் தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க மாளிகாகந்த நீதவான் நீதிபதி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.