
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைதுசெய்யப்பட்டமைக்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையில், மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் இளைஞர்களினால் நேற்று (08) இரவு பட்டாசு கொழுத்தப்பட்டு மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகத்தில் வைத்து கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன், கொழும்பிலிருந்து வந்த குற்றப்புலனாய்வுத் துறையினரால் நேற்று இரவு 8.00 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
அவர் கைது செய்யப்பட்டதுடன், அவரை உடனடியாக கொழும்புக்கு கொண்டுசெல்லும் பணியையும் முன்னெடுத்திருந்தனர்.
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் பிள்ளையான், அண்மையில் கொழும்பு புலனாய்வுத்துறை அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவந்த விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை மேகொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையிலேயே பிள்ளையான் கைது செய்யப்பட்டமைக்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையில், மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இளைஞர்களினால் நேற்று இரவு பட்டாசு கொழுத்தப்பட்டு மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது.