
முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்துள்ள நிலையில், பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (9) உத்தரவிட்டது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், மணல் அனுமதிப் பத்திரம் வழங்குவதற்காக தொழிலதிபர் ஒருவரிடமிருந்து 15 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்ற சம்பவத்திற்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில், கடந்த மார்ச் 25 அன்று இலஞ்ச ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட வியாழேந்திரன், முதலில் ஏப்ரல் 01ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் அவரது விளக்கமறியல் காலம் மார்ச் 08ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் நேற்று (08) காலை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
இதன்போதே முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை பிணையில் விடுவிக்க, கொழும்பு நீதவான் நீதிமன்ற பிரதான நீதவான் தனுஜா லக்மாலி நேற்று உத்தரவிட்டார்.
எனினும் சந்தேக நபரால் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாததால் அவர் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவர் அனைத்து பிணை நிபந்தனைகளையும் பூர்த்தி செய்தமையால் இன்று நீதிமன்றம் அவரை பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.