
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 23 ஆம் திகதிக்குப் பின்னர் விசாரணைக்கு அழைக்க லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிரான முறைப்பாடு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலமொன்றை பதிவு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலஞ்சம் – ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டார்.
2016 ஆம் ஆண்டு அரச வங்கியில் வைத்திருந்த நிலையான வைப்பு கணக்கை முதிர்ச்சியடைவதற்கு முன்னர் திரும்பப் பெற்றதன் மூலம் ஊழல் செய்ததாகக் கூறி, சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் தற்போது விசாரணை இடம்பெறுகிறது.
இது தொடர்பாக, ரணில் விக்கிரமசிங்க கடந்த வியாழக்கிழமை (10) கருத்து வௌியிட்டிருந்த நிலையில், அதன் ஊடாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் நடாத்தப்படும் விசாரணை தொடர்பான தகவல்களை ரணில் விக்கிரமசிங்க அறிந்திருப்பதாகவும், சம்பந்தப்பட்ட விசாரணை தொடர்பான சம்பவத்தில் அவர் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் தலையிட்டுள்ளதாகவும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, அவர் வௌியிட்ட கருத்தில் உள்ள விடயங்களை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்களுடன் ஏப்ரல் 17 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு நேற்று அறிவிக்கப்பட்டது.
இதன்போது புத்தாண்டு தினத்தன்று தானும் தனது வழக்கறிஞர்களும் கொழும்பில் இருந்து வெளியே இருப்பதாகவும், அதனால் குறித்த திகதியில் தனக்கு வருகை தர முடியாது எனவும் ரணில் விக்ரமசிங்க தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெறுவதற்கு 23ஆம் திகதிக்கு பிறகு ஒரு திகதியை நிர்ணயிக்க ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.