
யாழில் விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பில், வலிவடக்கு காணிகள் விடுவிப்புக்கான அமையத்தின் ஏற்பாட்டில் வசாவிளான் சந்தியில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று (17) இடம்பெற்றது.
காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை வைப்பதற்காக குறித்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது அங்கு வருகை தந்த பொலிஸார், ஊடக சந்திப்புக்கு வந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டிருந்தனர்.
ஊடகவியலாளர் சந்திப்பு ஆரம்பிப்பதற்கு முன்னரே அங்கு வந்த பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார், ஊடக சந்திப்புக்கு வந்திருந்தவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
அதாவது, இது உயர் பாதுகாப்பு வலயம் எனவும் இங்கு கூட்டம் கூட முடியாது எனவும் பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
எனினும் ஊடக சந்திப்புக்கு வந்திருந்தவர்கள், எமது காணிகள் விடுவிப்பை வலியுறுத்தி ஊடக சந்திப்பை நடாத்தவே வந்ததாகவும் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து பொலிஸார், ஊடக சந்திப்புக்கு வந்திருந்தவர்களின் தேசிய அடையாள அட்டையை வாங்கி பெயர்களை பதிவு செய்ததுடன், அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தவர்களை காணொளி மற்றும் புகைப்படங்களை எடுத்து அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டனர்.
பொலிஸாரின் இந்த நடவடிக்கையை காணொளி எடுத்த ஊடகவியலாளர்களையும் பொலிஸார் மற்றும் பொலிஸ் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தும் வகையில் காணொளி எடுத்தனர்.
அத்துடன் ஊடகவியலாளர் சந்திப்பை முடித்து விரைவாக செல்லுமாறு அங்கு வந்திருந்தவர்களுடன் பொலிஸார் தொடர்ச்சியாக தர்க்கத்தில் ஈடுபட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.