
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை எதிர்வரும் மே மாதம் 5ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாமர சம்பத் தசநாயக்க ஊவா மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் ஏற்பட்ட ஒரு முறைகேடு தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 07ஆம் திகதி காலை பதுளை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை, ஏப்ரல் 21 ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது.
அதன்படி இன்று (21) பதுளை நீதவான் நீதிமன்றத்திற்கு சாமர சம்பத் தசநாயக்க அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் மே மாதம் 5ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை நீதவான் நுஜித் டி சில்வா உத்தரவு பிறப்பித்துள்ளார்.